Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 21

இருள் மறைத்த நிழல் (தேனு) - 21
அந்த வாரக்கடைசியில் அவள் எதிர்பார்த்தது போலவே, சந்தானம் தாத்தாவிடமிருந்து போன் வந்தது. வழக்கத்திற்கு மாறாக ரொம்ப நேரம் மிதுனாவோடு உரையாடினார். அன்று மாலையே காசிக்கு கிளம்புகிறார்களாம். 'சுபம்' டிராவல்சின் 'பாக்கேஜ் டூர்'  என்பதாலும், அவர் நண்பர் சுகவனமும் இன்னும் சில குடும்பங்களும் வருவதாலும், கவலை வேண்டாம் என்று தைரியம் சொன்னார். ஆனால் தைரியம் அவர் குரலில் இருந்ததாக தெரியவில்லை அவளுக்கு. முன்னிலும் சோர்வாக ஒலித்தது அவர் குரல். கண்கள் பனிக்க போனிலேயே விடைகொடுத்தாள் மிதுனா. பேச்சு முடியும் தருவாயில், சுந்தரம் தாத்தாவிடம் பேச வேண்டும் என்றார் அவர். பிரிவுபச்சார பேச்சு என்பதாலோ என்னவோ, அவளைத் தனியே அறையில் விட்டுவிட்டு சிட் அவுட்டில் நளந்தனும் சுந்தரமும் காத்திருந்தனர். கண்ணை மறைத்த நீரை சுண்டிவிட்டபடி அவர்களைத் தேடி அங்கே வந்தவள், சுந்தரம், "என்னம்மா?" என்று கனிவாகக் கேட்கவும், தொண்டை அடைக்க, "தாத்தா உங்களோடு பேச வேண்டுமாம்" என்றாள்.

"இதோ!" என்றபடி விரைந்தோடினார் சுந்தரம். ஒரு கலக்கத்துடனே அவர் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்த மிதுனாவிடம் "உட்காரேன்" என்றான் நளந்தன். மறுப்பின்றி மிதுனா அமர்ந்தாள்.

தொண்டையை கனைத்துக் கொண்ட நளந்தன், "நம்முடைய Package Tour ரொம்ப வசதியாக இருக்கும். நீ இந்த ஊரை சுற்றி பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டான்.

அவள் மனதை திசை திருப்பும் முயற்சி என்று அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அவனது கரிசனமும் தாங்க முடியாததாய் கனத்தது. தானே தன்னை திடப்படுத்தும் முயற்சியாய் அவனை நேராகப் பார்த்து, "எனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?" என்று திடுமெனக் கேட்டாள்.

தாத்தாவின் காசிப் பயணம் தாமதமாகிறதே என்று இதுநாள் வரைத்  துடித்தவளுக்கு, இன்று கிளம்புகிறார் என்ற சேதி ஏனோ உவப்பாக இருக்கவில்லை! மாறாக பெரும் இழப்பாக உணர்ந்தாள். தாத்தாவைப் பிரிந்து இருக்கும் இந்த மூன்று மாதங்கள் மனதை செலுத்த, திசை திருப்ப ஒரு வேலை உடனடி அவசியமாகப்பட்டது. ஒரு வேலைக்கான உத்தரவாதமாவது! அதனாலேயே எண்ணம் தோன்றிய வேகத்தில் அவனைக் கேட்டும் விட்டாள்.

ஆனால் அவன் அதை, குறைந்தபட்சம் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை போலும். நெற்றி சுருக்கி அவளைக் கூர்ந்து பார்த்தான்.

"தாத்தா சொன்னார்..இப்போது என்ன அவசரம்? சரி..சரி...பார்க்கிறேன். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை."

சாதாரணக் குரலில் அவன் சொன்னபோதும், தன் வாயடைக்க சொன்னானோ என்றே இருந்தது அவளுக்கு. அவள் வேலைக்கு போவதில் சுந்தரத்திற்கோ, இதோ இன்று இவனுக்கோ அதிக நாட்டம் இல்லாதது போன்றே மிதுனாவுக்குத் தோன்றியது. தோட்டத்தை வெறித்தபடி அவள் அமர்ந்திருந்தாள். அவள் மோனத்தை கலைக்காமல் நளந்தனும் தாத்தா வரும்வரை மௌனம் காத்தான்.

சில நிமிடங்களில் சுந்தரமும் வந்துவிட்டார். சோர்ந்து தெரிந்த அவரும் ஒன்றும்  கூறினாரில்லை. சில நிமிடம் கழித்து, குளிர்கிறது என்று சொல்லி நளந்தன் தான் இருவரையும் உள்ளே இட்டுச் சென்றான்.

அடுத்த நாள் நளந்தன் தொழில் தொடர்பாக ஆந்திரா சென்றுவிட்டான். தொடர்ந்த சில நாட்கள், வீடு வெறிச்சோடியது போல் இருந்தது அவளுக்கு.  சந்தானத்திடமிருந்தோ, சுகவனத்திடமிருந்தோ, எந்தத் தகவலும் இல்லை. சுந்தரம் மட்டும் மிதுனாவின் மன இறுக்கத்தை மாற்ற தினமும் அவளை இழுத்துப் பிடித்து ஏதாவது பேசினார். பெரும்பாலும் பழைய கதைகள் தான். அங்கிங்கென்று அவர் பேச்சில் நளந்தனும் எட்டிப் பார்த்தான். அருமருந்தன்ன பேரன் ஆயிற்றே! அவனைப பற்றி பேசாதிருப்பாரா சுந்தரம்?!

"பெண்கள், காதல், கல்யாணம் என்றால் ஒரு அலட்சியம் விஜிக்கு" என்று அன்றும் பேச்சுப்போக்கில்  வருத்தப்பட்டார் பெரியவர்.

அவன் வாய் மொழியாகவே அவளும் அந்த அலட்சியத்தை கவனித்திருக்கிறாள்! வயது கோளாறு என்று நினைத்தாள் மிதுனா. இல்லையென்றார் பெரியவர்!

அது அவன் தாயால் வந்த வினை என்றார்.

"சுபம் - என் மகன்..விஜியின் தந்தை வாலிபத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்று இருந்தானம்மா. சில மாதங்கள் ஒரு பெண்ணோடு சுற்றுகிறான் என்று என் காதிற்கும் வந்தது. இப்போது விஜி போல... நான் அது பற்றி அவனிடம் சண்டை போட்டேன். சுபம் எளிதில் என் பேச்சைக் கேட்பவன் அல்ல. ஆனால் அந்த சமயம் அவர்களுக்குள் என்ன மனவேறுபாடோ, அவனும் என் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவளை இனி பார்ப்பதில்லை என்று சொன்னான். ஆனால் அடுத்த வாரம் அவள் தான் மூன்று மாதம் என்று வந்து கண்ணைக் கசக்கினாள்.
அதற்குமேல் என்ன சொல்வது?! நாங்கள் ஊரில் பெரிய குடும்பம். அவர்கள் கொஞ்சம் வசதி குறைச்சல். பெண் எங்கள் ஜாதி தான். அதனால் காதும் காதும் வைத்தது போல விஷயத்தை மறைத்து,  பையன் ஆசைபட்டான் என்று மட்டும் சொல்லி,  விமரிசையாகவே திருமணத்தை நடத்தி முடித்தோம். முதல் இரு மாதங்கள் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. சுபம் கூட கண்டமேனிக்கு சுற்றுவதை விட்டு, பொறுப்புணர்ந்து நடந்துகொண்டான். எல்லாம் கொஞ்ச நாள்தான்..அதன் பிறகு, அவர்களிடையே ஒரு மனத்தாங்கல்.. அது..அதன் பிறகு சதா சர்வகாலமும்  சண்டைதான். அப்படி என்னத்தை தான் ஒருவரில் ஒருவர் கண்டு காதலித்தனரோ, தெரியவில்லை! ஒரு நாள் சிரித்து பேசினால் ஒன்பது நாள் சண்டைதான்!

இப்படியே பத்து வருட போராட்டம். வேற்றுமை முற்றி விவாகரத்தில் வந்து நின்றது!"
தாத்தா ஒரு பெருமூச்சோடு நிறுத்தினார்.

பாவம் நளந்தன்! பத்து வயதில் எத்தனை பெரிய அதிர்ச்சி! அவள் மனம் பாகாய் உருகியது.

"பத்து வயதில் அவருக்கு பெரும் பாதிப்பாக இருந்திருக்குமே, தாத்தா" என்று தன்னையறியாமல் வாய் விட்டு வருந்தினாள் மிதுனா.

சற்று திடுக்கிட்ட பெரியவர், "பத்து வயதா?!.. இல்லையேம்மா. அப்போது விஜிக்கு எட்டு வயதும்மா.. அவனது எட்டாவது பிறந்த நாளன்று தானே ரத்து என்று முடிவானது!" என்றார்.

திருமணத்தன்று மூன்று மாதம் என்றால்.. பத்து வருட திருமண காலத்தை கணக்கிட்டால்.. நளந்தனுக்கு குறைந்தது ஒன்பது வயதாவது ஆகியிருக்குமே.. பெரியவர் மறந்துவிட்டார் போல என்று அதை சாதாரணமாக்கி, "மேலே  சொல்லுங்கள் தாத்தா" என ஊக்கினாள்.

ஆனால் அவள் மனகணக்கை அவரும் புரிந்துகொண்டார் போல. தாத்தா கசப்பாக சிரித்தார்.

"புத்திசாலியம்மா நீ. கண்டுகொண்டாயே..கணக்கு உதைப்பதை கவனித்துவிட்டாயே அதைச் சொன்னேன். கல்யாணத்தின் போது  மூன்று மாதம் முழுகாதிருந்தவளின் குழந்தை பத்து வருடம் கழித்து எட்டு வயதானது தானே உன் குழப்பம்?     சுபாங்கனின் மனக்குமுறலுக்கும் அது தானே மூல காரணம்"

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை! ஒருவேளை..அது.. அந்த குழந்தை இறந்துவிட்டிருக்குமோ? அதற்கு மனவருத்தம் தானே வரவேண்டும்? மனவேறுபாடு எப்படி? அது தான் குழந்தை, அது போனால் வேறு குழந்தை பிறக்காது என்பதற்கல்லாமல் நளந்தனும் இருக்கிறானே?

"புரியவில்லையே தாத்தா?! மூன்று மாதம் என்று இவரின் தாய்.."
இடைமறித்தார் பெரியவர்.

"எல்லாம் பொய்யம்மா! அவள் மூன்று மாதம் என்று சொல்லி சுபத்தை நம்ப வைத்து அவனை மணந்து கொண்டாள்! விஷயம் தெரிந்ததும் சுபம் ரொம்பவும் அதிர்ந்து போனான்.. இப்படி பொய் சொல்லத் துணிந்தாளே என்று.. ஒருவரை ஒருவர் நம்புவது தான் திருமண பந்தத்தின் அடிப்படை.

என்னைக் கைவிட துணிந்தீர்களே..உங்களை எப்படி நம்புவது என்று அவளுக்கு. என்னிடம் அடாத பொய்  சொன்னாயே..உன்னை எதில் நம்புவது என்று இவனுக்கு. எதற்கு கல்யாணம் செய்து கொண்டார்களோ?! இவர்கள் சண்டையில் பெரிதும் மனம் பாதிக்கப்பட்டவன் விஜிப்பையன் தான்.

சுபம், கோபத்தில் மனைவியை பொய்க்காரி, துரோகி, வஞ்சகி என்றெல்லாம் திட்டுவானா..அது விஜியின் மனதில் அவன் தாய் மேல் ஒரு.. ஒரு வெறுப்பைத்  தோற்றுவித்தது..கோர்ட்டில் வேறு இவன் சிறுவன் என்பதால் தாயோடு செல்ல தீர்ப்பானதா.. இன்னும் முரண்டுபிடித்தான். அவளுக்கு எதிர்ப்பாக எதையாவது செய்வது.. ஒன்றும் திருத்த முடியாது கை மீறும் சமயத்தில் தான்.. அவனது பதினாலு வயதில் எங்களிடம் அவனைக் கொண்டுவிட்டாள். அதற்குள் இங்கே சுபம் வேறு கல்யாணம் செய்துகொண்டான். அது வேறு விஜிக்கு இன்னுமொரு இடி. அடுத்த ரெண்டு  வருட காலத்தில் தாய் தந்தை இருவரும் அடுத்தடுத்து காலமாயினர்."
குரல் தழுதழுத்தார் சுந்தரம்.

"வாழ்க்கையில் ஒத்துப் போகாதவர்கள், மரணத்தில் ஒத்துப் போனார்கள்.. விதி! வழி நடத்த பெற்றோர் தேவையான விடலைப் பருவம் விஜிக்கு. மனம் போன போக்கில் போனான்.. கிழவன் என்னால் பெரிதாக அவனை சீர் படுத்த முடியவில்லை..
விஜயனுக்கு சிறு வயது முதலே தன் தந்தை மேல் அபார பிரியம், பிரமை, மதிப்பு எல்லாம். அவர் வேறு திருமணம் செய்ததை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை..  தன் தாய் தான் அவரை புரிந்துகொள்ளாமல் அவர் வாழ்வை காதல் என்று வீணடித்துவிட்டதாக இன்றுவரை அவள் மேலும் கோபம். அவரோடு அவனை விடாது பிரித்து சதி செய்ததாக குரோதம். அவன் வளர வளர வேண்டாத நட்பு.. மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று அதில் ஒரு துரதிர்ஷ்டமாய் பெண்கள் சகவாசம்.. காதல், கல்யாணம், பெண்கள் என்றால் ஒரு அசட்டை, ஒரு அலட்சியம்.." சுந்தரம் சொல்லொணாத் துயரோடு கசிந்த கண்களைத் துடைத்துக்கொண்டார்.

"உன்னிடம்..ஏதும் ... தவறாக ஏதும் " என்று சிறிது தடுமாறி அவர் கேட்க வந்ததை கேளாமல் கேட்க அதிர்ந்து போனாள் மிதுனா.

இல்லையே..வெகு கண்ணியமாக அல்லவா நடந்துகொள்கிறான்! முதல் ஒரு நாள் தவிர யாதொரு தரமும் அவளை ஏளனமாக ஒரு பார்வை கூட அல்லவே! அதுவும் அன்றையத் தவறு முழுக்க அவளுடையதே. தாத்தா அவனை ஒரு நிமிடம் கூடத் தவறாக நினைப்பதை பொறுக்க மாட்டாது, அவசரமாக "அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லையே தாத்தா..அவர் ரொம்பவும் கண்ணியமான..கண்ணியமாகத்தான் நடந்துகொள்கிறார்" என்றாள்.

அவள் பதட்டத்தில் என்ன கண்டாரோ, ஒரு சமாதான சிரிப்போடு, "நானும் அப்படித்தான் நினைத்தேன் அம்மா.. பெண்கள் என்று பார்த்தால், சுகுணாவிற்கு அடுத்தபடி அவன் நன்றாக பழகுவது உன்னிடம் மட்டும் தான்." என்றார்.

ஏதோ அவன் பெண்களிடமே பழகியறியாத 'ரிஷ்யசிருங்கர்'  போல அவர் பேசுவது அவளுக்கு விந்தையாக இருந்தது. இதே தாத்தா அவனது வாரக் கடைசிகளை பற்றியும், சுற்றுகிற பெண்கள் பற்றியும் அவளிடமே புலம்பியிருக்கிறாரே! ஏன், இப்போதுகூட பெண்கள் சகவாசம் என்றாரே! முன்னுக்குப்பின் முரணான அவர் கருத்து அவளுக்குப் பிடிபடவில்லை.

அவளது எண்ணம் உணர்ந்து அவரே ஐயம் திரிபற களைந்தார்.

"பெண்களிடம் அலட்சியம் என்றால் பெண்களை வெறுக்கிறான் என்று அர்த்தமில்லையேம்மா. அவர்களிடம் ஒரு மதிப்பு மரியாதை இல்லை. மதிப்பு மரியாதை இல்லாததால் தானேம்மா பொழுதுபோக்கு அம்சமாக பெண்களை நினைப்பதும், அப்படி சுற்றுவதும், பழகுவதும்?!" என்றுக் கசந்து கொண்டார்.

அப்படிச் சுற்றுகிற பெண்கள் இருக்கையில் அவனுக்கும் தான் எங்கிருந்து பெண்கள் மேல் மதிப்பும் மரியாதையும் வரும்?! எந்த விதத்திலாவது அவன் தவறுகளை நியாயப்படுத்தத் தான் துடிப்பது அவளுக்கேத் தெரிந்தது. ஏன் என்று தான் புரியவில்லை. போகட்டும். நளந்தன் அவளையும் அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டத்தில் ஒருத்தியாய் பாராது விட்டானே! தோன்றிய நிம்மதி, அதே பட்டாம்பூச்சிக் கூட்டத்தில் விட்டுப்போன, நளந்தனின் நன்மதிப்பை பெற்ற 'அந்த சுகுணாவின்' நினைவில் குலைந்தது.

யாரந்த சுகுணா?! முன்னாள் காதலியா? அவன் நன்றாக பழகிய ஒரே பெண் ஏன் முன்னாள் காதலி ஆக வேண்டும்? நொடிப் பொழுதில் பலப் பல கற்பனைகள் செய்து படபடத்த மிதுனா, சுகுணா டாக்டர் சுகந்தனின் தாயார் என்று தெரிந்ததும் பொங்கிய பாலில் நீர் தெளித்ததுப் போல அடங்கிப் போனாள். சே! அதற்குள் என்னவெல்லாம் நினைத்துவிட்டாள்!

"சுகுணா" கண்களை மூடித் திறந்தவர், "சுகவனத்தின் ஒரே பெண்.  நல்ல குணவதி. அத்தை அத்தை என்று விஜயன் அவளையேச் சுற்றிச் சுற்றி வருவான். தன் தாயிடம் எதிர்பார்த்து கிடைக்காது ஏங்கிய புரிதலை அவளிடம் கண்டான். பிள்ளைகள் வளர வளர, சுகந்தனின் மருத்துவப் படிப்பிற்காக ஊர் மாற்றி ஜாகை மாற்றி சுகவனம் சென்றபின் அவர்கள் வருகை படிப்படியாக குறைந்தது. லட்சுமி கடாட்சம் போல இருப்பாளம்மா. உனக்கும் அவளை பார்த்தவுடன் பிடிக்கும்" என்றார்.

அவள் எப்படி எங்கே அவர்களைப் பார்க்கப் போகிறாள்?! எண்ணமிடுகையிலேயே,"அவள் இன்னும் சில தினங்களில் இங்கு வரப்போகிறாளம்மா " என்றார்.

ஓஹோ.. அவர்கள் தந்தை காசிக்குச் சென்றபின், கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கும் போல.. இந்த சுந்தரம் தாத்தாவைப் பார்க்க வருகிறார் போலும். அதற்குமேல் அதை பற்றி அவளுக்கு ஒன்றும் யோசிக்கத் தோன்றவில்லை.

நளந்தனும் ஆந்திராவில் இருந்து எப்போது வருவான் என்று முடிவாகத் தெரியாதபடியால்,  தன் வேலை விஷயமாக இன்னும் அவனையே நம்பிக் கொண்டிருக்கவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனும் பார்க்கலாம் என்று பட்டும்படாமலும் தானே சொன்னான். அதை எந்தவகையில் நம்பிக்கொண்டிருப்பது?!

தன்னறையில் இருந்த கணினியில் (Computer) பல வலைதளங்களுக்கு சென்று, தானே முனைந்து வேலை தேடலானாள். அவள் அதிர்ஷ்டம், B.Sc., +1, +2 மாணவர்களுக்கு கணிதம்  Online Tutoring செய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இது போல முன்பும் ஊரில் செய்திருக்கிறாள் ஆகையால், முன் அனுபவம் வேலையைப் பற்ற கை கொடுத்தது. வருமானம் அதிகமில்லைதான். தற்போது பணத்திற்கு தேவையுமில்லை, தட்டுப்பாடும் இல்லை. ஆனால், வேண்டாத எண்ணங்களில் இருந்து விடுபெற வகை செய்யுமே! செய்தது!

இரவிலும் பகலிலும், தலா இரண்டு மணி நேரம் பாடம் பயில்வித்தலில் கழிந்தது. சில சமயங்களில் சந்தேகம் தெளிவிப்பதற்குமுன் தானும் சிலவற்றைப் படிக்க வேண்டியிருப்பதால், அதற்குமேலும் நேரம் செலவானது. அந்த அயர்வில் படுத்தவுடன் தூங்குவதும் எளிதானது. சதா சர்வகாலமும் ஒன்று தாத்தாவின் பயணம், பிரிவு பற்றி கலங்குவதும் அது இல்லாவிட்டால், நளந்தனைப் பற்றி ஆராய்வதுமாக அலைபாய்ந்தவள் அந்த சில மணி நேரங்களில் தான் மனம் ஒன்றி அமைதியாக  செயல்பட்டாள். அல்லது அமைதியாய் செயல்படுவதாக நினைத்தாள், அலுவல் முடிந்து ஊர் திரும்பிய நளந்தனைக் காணும்வரை!

Comments

  1. நல்ல பதிவு தேனு

    மிதுவின் போக்கிலேயே கதையை கொண்டு செல்லும் முறை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது

    தாத்தாவிடம் போன் பேசியதில் இருந்து நளனின் வாழ்க்கை வரலாறு ,பின் பாடம் பயில்வித்தலில் முடியும் வரை சுவை குன்றாமல் செல்கிறது .,தொடர்கிறேன்

    ReplyDelete

Post a Comment