Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 31

இருள் மறைத்த நிழல் (தேனு) - 31

நளந்தன் காரில் மிதுனா ஏறிக் கொண்டாள். காரை மிதமான வேகத்தில் செலுத்தினான் நளந்தன். காரில் ஒரு நிசப்தம் நிலவியது. நளந்தன் எப்போதுமே அளவாகத்தான் பேசுவான் என்பதால் அந்த மௌனம் மிதுனாவுக்கு வித்தியாசமாக இல்லை. இன்னும் சொல்லப் போனால் இப்படி இருவரும் பேசாது தத்தம் சிந்தனையில் ஆழ்ந்து வருவதே அவளின் அப்போதைய மனநிலைக்கு பிடித்தமாய் இருந்தது.

அவனோடு பயணிக்கும் இந்த பயணம் ஏன் இப்படி இதமாக இருக்கிறது?.. இன்று இந்த பயணத்தை தவிர்க்க அவள் ஒற்றைக் காலில் முயன்றதென்ன.. இப்போது இதே பயணத்தை ரசித்து, இன்னும் கொஞ்ச நேரம் இது நீண்டால் என்ன என்று ஏங்குவதுதான் என்ன! நினைத்தாளா இன்று நளந்தன் வந்து அவளை அழைத்துப் போவான் என்று..? அல்லது வீட்டிற்கு திரும்பி செல்கையில் கூட வருவான் என்று தான் நினைத்தாளா?!


அவள் சிந்தனையைக் கிழித்தபடி நளந்தனின் செல் அலறியது. 'Handsfree Mode' - ல் செல்-ஐ வைத்திருந்தான் அவன். பட்டனைத் தட்டியதும், "ஹாய் விஜ்ஜி!" என்று நாராசமாக ஒலித்தது சுபலாவின் குரல்!


மிதுனாவிடம் ஒரு பார்வையை வீசியவன், "ஐ வில் கால் யூ இன் எ மினிட்" என்று மட்டும் சொல்லி பேச்சை துண்டித்தான்.

மிதுனாவின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. முகத்தை ஜன்னலோரம் திருப்பிக் கொண்டாள்.

வேகத்தை குறைத்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியவன், "நீ உள்ளேயே இரு, மிதுனா." என்று சொல்லி இறங்கினான்.

வெளியே சற்று தள்ளி செல்லில் யாருடனோ.. யாருடனோ என்ன.. அந்த சுபலாவிடமாக தான் இருக்கும். ஒரு நிமிடத்தில் கூப்பிடுவதாக தானே சொல்லி முடித்தான்.. அவளுடன் என்னவோ பேசினான்.

பின் காரை எடுத்தவன், அவளிடம் ஒன்றும் பேசவில்லை. ஓரிரு முறை அவன் கூரிய பார்வை அவள் மேல் படிந்தது போல இருந்தது. வீட்டை அடைந்தவன் காரை விட்டு கீழிறங்காமல், "நான் வர நேரமாகும்.. " என்றான்.

அவளது கலங்கிய முகம் கண்டவன், "பிசினஸ் விஷயமாக ஒருவரை பார்க்க வேண்டி இருப்பதாக சுகிர்தனிடம் சொன்னேனே.. மறந்துவிட்டாயா? இப்போதே நேரம் ஆகிவிட்டது.. " என்று சமாதானமாக சொன்னான்.

அவளுக்கு அவன் விளக்கம் சொல்ல வேண்டியதில்லைதான். இருந்தும் சொன்னான். பிசினஸ் என்று அவன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை.. ஆனாலும்
அவன் கூற்றை  ஒப்புக் கொண்ட பாவனையில் "சரி" என்று சொன்னவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது..
"நீங்கள் ஏதோ முக்கியமான பேப்பர்.. டாகுமென்ட் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னீர்களே..இங்கே மறந்து வைத்து விட்டதாக.." என்று நினைவு படுத்தினாள்.

அவளை குறும்பாக பார்த்து,  "அது..வேண்டியதில்லை.. இன்று உன் தேவைக்கு வந்து போன தலைவலி போல என் தேவைக்கு நான் மறந்து போன டாகுமென்ட் அது..." என்று அது வரை இருந்த இறுக்கம் தளர சிரித்து சென்றான்.

அவள் மனம் புரிந்து, அவளுக்கு அந்த பாலண்ணா வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லாததை உணர்ந்து, இதை மறந்தேன், அதை மறந்தேன்.. அப்படியே இவளையும் வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி.. அவள் இதம் கருதி ஒன்று செய்திருக்கிறான்..இது போல இன்னும் சின்ன சின்ன விஷயங்கள் பார்த்து பார்த்து செய்கிறான்..ஒரு தோழனைப் போல..

ஆனால் சுபலா விஷயம் புரியவில்லையே.. அவன் வாழ்வில் சுபலா யார்? அவன் மனதில் ஒரு பொறி என்று சொன்னானே.. அந்த பொறி சுபலா தானா?

"திங்க் ஆப் த டெவில்" என்பது போல சுபலாவே அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வந்தாள்!

தாத்தா மூச்சிரைப்பு மாத்திரை போட்டு அந்த மயக்கத்தில் அப்போதுதான் கண் அயர்ந்தார். அதனால் அவரை எப்படி எழுப்புவது என்று மிதுனா தயங்கினாள்.

"தூங்கட்டும் தூங்கட்டும். எழுப்ப வேண்டாம். அவர் தூங்குவதும் நல்லது தான். இடையூறு இல்லாமல் நாம் கொஞ்ச நேரம் பேசிக் கொடிருக்கலாமே"  என்றவள்  மிதுனாவின் ஒப்புதலுக்கு காத்திராமல் மாடி ஏறி மிதுனாவின் அறைக்கு அவளாகவே சென்றுவிட்டாள். வேறு வழியின்றி மிதுனாவும் அவளைத் தொடர்ந்து அறைக்கு செல்ல வேண்டியதாயிற்று.

என்னவோ பல நாள் பழக்கம் போல சுபலா அவள் அறைக்குள் நுழைந்தது மிதுனாவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இவளோடு பேச என்ன இருக்கிறது? சுபலாவோடு பேச சிறிதும் இஷ்டமோ தென்போ இல்லை அவளுக்கு. ஆனால் சுபலா அதை எல்லாம் சட்டை செய்வதாக இல்லை.

தாத்தாவிடம் பேச முடியாதது குறித்தும் அவள் சட்டை செய்யவில்லை. அதை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை. ஏன், நளந்தன் வீட்டில் இல்லை என்பது கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.

"அடடா..அதற்குள் கிளம்பிவிட்டாரா " என்று ஒரு உதட்டளவு வருத்தம் மட்டுமே காட்டினாள்.

நளந்தன் வீட்டில் இல்லாமலும் போகலாம் என்று அவள் எதிர்பார்த்திருந்தது போல இருந்தது அவளது செய்கை. அவனை பார்ப்பது அவ்வளவு முக்கிய விஷயம் இல்லையென்றால், பின் ஏன் அப்படி அலைய குலைய அந்நேரம் அங்கு வரவேண்டும்? அதுவும், ஒரு முன்னறிவிப்பு கூட இல்லாமல்.. குறைந்தபட்சம், நளந்தன் இருக்கிறானா, இல்லையா என்று கூட கேட்டு  தெரிந்துகொள்ளாமல்..

எதற்கு வந்தாள்? யாரைப் பார்க்க வந்தாள்? நேரிடையாகவும் மிதுனாவால் எதுவும் கேட்க முடியவில்லை.

நீ யார் அதைக் கேட்க என்று சுபலா கேட்டால்  அவமானம். 'என் விஜ்ஜி'யைப் பார்க்க என்று சொல்லிவிட்டாளானால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதிக்கும் இல்லை உத்தரவாதம்! ஏனோ சுபலாவை நளந்தனோடு இணைத்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை.

இவள் கேட்காவிட்டால் என்ன.. சுபலா சொல்லாமல் விடுவாளா?! அதிலும் சிலவற்றை சொல்வதற்காகவே அங்கு அந்நேரம் வந்தவள்?!

"விஜியோடே சேர்ந்து போகலாம் என்று பார்த்தேன் " என அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்.

மிதுனா எங்கே என்று கேட்பாள் என எதிர்பார்த்தாள் போலும்.. அப்படியேதும் மிதுனா கேள்வி எழுப்பாததால், சில வினாடி அமைதிக்கு பின் அவளே பேசினாள்.

 "உன்னை வேறு கொண்டு விட வேண்டி இருப்பதால், வர நேரமாகும் என்றாரா.. சரி, நாமும் இங்கே வந்து அவரோடு சேர்ந்தே போகலாம்  என்று வந்தால்.. உன்னை இங்கே தள்ளிய கையோடு, கிளம்பிவிட்டார் போலிருக்கிறது. அதற்குள் அவருக்கு பொறுக்கவில்லை.. விஜிக்கு என் விஷயமென்றால் எப்போதும் ஒரு அவசரம்.." என்று அவளுக்கு அவன் பறப்பது ஒரு குறை போல பெருமை அடித்து
"கிணற்று நீரை வெள்ளமா அடித்து செல்லப் போகிறது?!" என ஓரக் கண்ணால் மிதுனாவை அளந்தபடி சொன்னாள்.

அவள் பேச்சில் மிதுனாவிற்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது..  நளந்தனும் சுபலாவுமாக எங்கோ சேர்ந்து செல்ல திட்டமிட்டதை மிதுனாவிடம் தெரிவிக்க துடிக்கும் சுபலாவின் வேகம்.
கூடவே, 'உன்னை இங்கு தள்ளி விட்டு என்னை பார்க்க ஓடி விட்டான் நளந்தன்' என்று சொல்லாமல் சொல்லி மிதுனாவை காயப்படுத்த முனைந்த அவள் நோக்கம்.

அவள் நோக்கம் நிறைவேறியது என்று தான் சொல்ல வேண்டும். மிதுனா காயப்பட்டு தான் போனாள். சுபலாவிடம் பொய்மை தெரிந்தாலும், இது முழுக்க பொய் என்று ஒதுக்கி விட முடியாதே.. நளந்தன் ஒரு அவசரத்தோடு தானே அவளை விட்டு சென்றான். அவளை கொண்டு விட வேண்டி இருந்தது என்று சொன்னானாமே.. அதுவும் நிஜம் தானே..  தான் யூகித்தது போல அந்த பெட்ரோல் பங்கில் சுபலாவைத் தான் அழைத்து பேசினான் போலிருக்கிறதே.. இல்லையென்றால் இவர்கள் சுகிர்தனின் மனையை பார்க்க சென்றதும், மிதுனாவை நளந்தன் வீட்டில் விட வந்ததும் இவளுக்கு எப்படி தெரியும்?..

பேசா மடந்தையாக மிதுனா நிற்க எரிச்சலுற்ற சுபலா, "ம்ம்.. நான் ஒருத்தி.. இப்படி பாதி பாதியாக சொன்னால் உனக்கு எப்படி புரியும்? இப்படி தான் ஒன்றும் புரியாமல் மௌன சாமியார் போல நிற்பாய்.
அது ஒன்றுமில்லை, இன்று நானும் விஜியும் மதியம் தனியே சந்திப்பதாக பேசி வைத்திருந்தோம். அந்த நேரம் பத்ரி வந்துவிட்டதால், மனம் விட்டு ஒன்றும் பேச முடியவில்லை.  இன்று மாலை வீட்டிற்கு வருவதாக சொன்னார் விஜி. அதற்குள் உன்னை கொண்டு விடவேண்டி தொல்லையாகிவிட்டதா.. அது முடியாமல் போகவும், சரி, எப்போதும் சந்திக்கும் கிளப்பிற்கே என்னை நேரே  வந்துவிடும் படி சொல்லிவிட்டார்.
எப்படியும் உன்னை விட வீட்டிற்கு தானே வருவார்,  இங்கு வந்து அவரோடு சேர்ந்து போகலாம்..அவருக்கும்  ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று நான் இங்கே ஓடி வந்தேன். அவரானால், என்னை தேடி அங்கே ஓடி விட்டார். கிணற்று நீரை வெள்ளமா அடித்து சென்று விடும்?" என்று கண் சிமிட்டினாள்.

இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று முகத்தில் அடித்தது போல கேட்கவேண்டும் போல இருந்தது மிதுனாவுக்கு. அரும்பாடுபட்டு நாவடக்கினாள். சுபலாவின் பேச்சில் நிறைய உள்ளர்த்தம் இருந்ததாக தோன்றியது.. 'மனம் விட்டு பேச', 'எப்போதும் சந்திக்கும்' என அங்கங்கே சொற்களை வலிந்து புகுத்தியது போல.. நளந்தனோடு நெருக்கம் என்று காட்ட முனைவது போல.. ஒருவேளை நிஜமாகவே அப்படித்தானா? அந்த நினைவே கசந்தது. சீசீ போயும் போயும் இவளிடமா.. என்னவோ சுபலாவை சகிக்க முடியவில்லை. இவள் கையில் நளந்தன் குரங்கு கை பூமாலை என்று தாத்தா சொன்னதாலா?!

சுபலா சும்மாவே அடுத்தவர் பேச அனுமதிக்கமாட்டாள். இப்போதோ கொட்ட நிறைய விஷயமிருந்தது போலும், மிதுனாவும் எதிர் கேள்வி கேட்காததால் வெண்கல பானையில் யானை ஆனாள்.

விஜ்ஜியோடு அங்கே போனேன், இங்கே போனேன்.. அப்படி சொன்னார் இப்படி சொன்னார்.. இன்னும் ஒரு படி மேல போய், அப்படி செய்தார், இப்படி செய்தார் என்று அவள் ஆரம்பிக்க, அதற்குமேல் மிதுனாவால் அந்த ஓரங்க நாடகத்தை சகிக்க முடியவில்லை.
"நீங்கள் இங்கே பேசிக் கொண்டிருந்தால், எப்படி? உங்களுக்கு நேரமாகவில்லையா?" என்று சுருக்கென்று கேட்டுவிட்டாள்.

அவமானத்தில் முகம் கருத்த சுபலா, "காத்திருக்கட்டும்.. காத்திருந்தால் தான் கனி எவ்வளவு சுவை என்று புரியும். காதல் என்றாலே காத்திருந்து தவிப்பது தானே" என்று சமாளித்து எழுந்தாள்.

"காத்திருந்து தவித்து இல்லாமல் போவது என்று படித்ததாக ஞாபகம்"  என்று இடைவெட்டி பேசிய மிதுனா, இந்த மட்டிலுமாவது அவளால் திருப்பி கொடுக்க முடிந்ததே என்ற திருப்தியோடு  தானும் எழுந்து சுபலவிற்கு கட்டாய விடை கொடுக்கும் மார்க்கமாக வாயில் நோக்கி சென்றாள்.

ஒரு வழியாக குறிப்புணர்ந்த சுபலா, "இதற்குமேல் தாமத்திதேன் என்றால் அவ்வளவுதான். விஜ்ஜி என் வீட்டிற்கே என்னை தேடி போய்விடுவார். அப்புறம் நானும் அவரும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் ஆடவேண்டும்." என்று ஏதோ மிதுனா தான் அவள் கையைப் பிடித்து இழுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தது போல தோரணையாக விடைபெற்றாள்.

Comments

  1. hi, this is manju.i like ur story very much.really very nice.similar to ramani's novel.please publish the same and also let me know if u r doing any new novels....i b'cme ur fan after reading.excellent one.the language and words used by you are really very nice..expecting more novels from you.

    ReplyDelete
  2. hi,this is manju,your novel is really excellent.please publish.i like it very much.it is as ramani's novel(my fav).please continue ur writing

    ReplyDelete
  3. // அவளை குறும்பாக பார்த்து, "அது..வேண்டியதில்லை.. இன்று உன் தேவைக்கு வந்து போன தலைவலி போல என் தேவைக்கு நான் மறந்து போன டாகுமென்ட் அது..." என்று அது வரை இருந்த இறுக்கம் தளர சிரித்து சென்றான். //

    Nice lines..

    ReplyDelete

Post a Comment