Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 44

இருள் மறைத்த நிழல் (தேனு) - 44

நடுங்கிய இதழ்களை பற்களுக்கு தந்து நடுக்கம் குறைக்க முயன்றவள், "நான் உடனே பெங்களூரு செல்ல வேண்டும்..என்.. என்னிடம் போதுமான பணம் இல்லை.. ஒரு டிக்கட் மட்டும் ஏற்பாடு செய்தால் போதும்..நீங்கள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட்டு விடுகிறேன்.. ஏற்பாடு செய்ய முடியுமா? ஒரு கடைசி உதவி போல.. "  மேற்கொண்டு பேச இயலாது குரல் கம்மிற்று.

உண்மையை மறைத்து விட்டாயே என்று கத்த முடியாது அவனிடமே உதவி கேட்டு பிச்சைக்காரி போல கையேந்த வேண்டி இருக்கிறதே என்று அவமானத்தில் தரையை பார்த்து பேசியவள், நளந்தனிடம் ஒரு வேகமான அசைவை உணர்ந்து அவனை நிமிர்ந்து நோக்க, அங்கே.. கழுத்தோர நரம்பு துடிக்க, ரத்தமென சிவந்து சினந்து ஜொலித்த அவன் கண்களில் மொத்தமும் அதிர்ந்தாள்.

தாத்தாவின் அன்றைய சுகவீனத்திற்கு பின் அவனை தொக்கி நின்ற நிதானம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது. விவரிக்க இயலா அருவெறுப்போடு அவளை பார்த்து, "அதற்குள் வேறு தேடியாகி விட்டதா?!" என்றான்.

அவன் பேச்சு முழுதும் புரியாவிட்டாலும், அவன் முக பாவத்திலேயே அவளும் ஆதியோடந்தமாக கூசினாள்.

"என்ன உளறுகிறீர்கள்?" கோபம் கனன்ற அவள் கேள்விக்கு, தற்காலிக ஓய்வெடுத்த நிதானத்தை குரலில் சேர்த்து, "இங்கே பப்பு வேகவில்லை என்றானதும் , அனுதாப அலையில் ஆதாயம் பார்க்க புறப்பட்டாயாக்கும்! அனாவசிய அலைச்சல்! சுகிர்தன் இப்போது இருப்பது லண்டனில். அடுத்த கிளை இன்னும் ஒரு வருடத்திற்கு கைக்கு எட்டாது," என்று பார்வை மாறாது உரைத்தான்.


என்ன வார்த்தை சொல்லிவிட்டான்! நளந்தனுக்கு வலை போட்டாள் என்றெல்லாம் அவன் பழி சுமத்திய போதும் அவள் பொய்த்து போனாளே என்ற ஆதங்கத்தில் வார்த்தையை விடுகிறான் என்று அப்படி பொறுத்து பொறுத்து போய் தன்னிலை விளக்கம் கொடுத்தாளே.. ஆனால் நளந்தனோ வெகு எளிதாக தன்னை இவனில்லாவிட்டால் இன்னொருவன் என்று ஆள் தேடும் அளவிற்கு மட்டமானவள் என்று நினைத்ததை அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்படி அவள் தரம் இறங்குவாள் என்றும் நம்ப முடிகிறதா அவனால்?!  இவனையா அப்படி உருகி உருகி காதலித்தாள் மிதுனா. அவள் நந்தனா பேசியது?! இப்படி ஒரு வேசியினும் கேவலமாக அவளை சித்தரித்துவிட்டானே. தன்னுள் ஏதோ மடிவது போல உணர்ந்தாள் மிதுனா. வேறென்ன நளந்தன் மேல் கொண்ட நேசமாகத் தான் இருக்கவேண்டும்!


ஆத்திரமும் ஆற்றாமையும் காட்டாறு போல பொங்கியது. விவாதங்களை வளர விட்டு என்ன பயன்? காலம் கடக்கும் முன் தன் தாத்தாவிடம் சென்று சேர வேண்டும். எஞ்சிய நாட்களையேனும் அவரோடு கழிக்க வேண்டும்.. அதனால் பொறு மனமே பொறு என்றெல்லாம் மனதுள் உரு போட்டு வைத்த பொறுமை காற்றில் பறந்தது. மிதமிஞ்சிய கோபத்தில் கையோங்கினாள் மிதுனா. ஆனால் மின்னல் விரைவில் அவள் கையை அனாயாசமாக தட்டி விட்ட நளந்தன், "உள்ளதை சொன்னால் உடம்பு எரிவானேன்?! " என்றான் அவளுக்கு கொஞ்சமும் குறையாத கோபத்தில்.

அவனிடம் மறுப்பாக கூட ஒரு வார்த்தை பேசவும் அவளுக்கு வெறுத்தது.

அவளை தவறாக எடை போடுவதில் தான் அவனுக்கு எத்தனை ஆனந்தம்! நெஞ்செல்லாம் கசந்து வழிந்தது அவளுக்கு.


கன்னத்தில் வழிந்தோடிய  நீரை ஆத்திரமாய் சுண்டி எறிந்தாள். அவன் அறைந்த கைத்தடம் பதிந்து வீங்கியிருந்த கன்னம் வலித்தது.

அவன் ஏதோ சொல்ல தொடங்குமுன் சுந்தரம் மயக்கம் தெளிந்து அனத்தினார். இருவரும் அவரிடம் ஓட சைகையால் அவர்களை அருகே அழைத்து,
"விஜயா, நான் உனக்கு நல்லது தானடா செய்வேன்.. என்னை நம்பி என் வார்த்தை கேளடா.. இவளை கல்யாணம் செய்து கொள்.." என்று கண்ணீர் விட்டு கேட்டார்.

"முதலில் உங்கள் உடல் தேறட்டும்" என்று அவன் தட்டி கழிக்க, ஒரு பிடிவாதத்தோடு அவனை பார்த்த பெரியவர், "என் உடல் தேறுவதும் தேறாது மண்ணோடு மண்ணாய் போவதும் உன் கையில் தானடா இருக்கிறது.." என்றார் குரல் உடைந்து.

நளந்தன், "உங்கள் இஷ்டம் போல எல்லாம் நடக்கும், தாத்தா. ஆனால் முதலில் உங்கள் உடம்பு பழைய படி தேற வேண்டும்." என்று பட்டும் படாமல் உத்தரவாதம் போல ஒன்றை சொல்ல, முழு திருப்தி அடையாத தாத்தா,
அவர் முகம் நோக்கி குனிந்து பேசி கொண்டிருந்த நளந்தனின் கழுத்து சங்கிலியைக் காட்டி, "நீ சொல்வது உண்மை என்றால், இந்த செயினை அவள் கழுத்தில் போடு"  என்றார் ஒரு குழந்தையின் பிடிவாதத்துடன்.

திகைப்பூண்டை மிதித்தது போல திகைத்த மிதுனா நளந்தனை பார்த்தாள். அவனும் அப்போது அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி நின்றது ஒரு கணம்.

அத்தனை ஏச்சிற்கும் பேச்சிற்கும் பின்னர் ஒரு காலத்தில் அவள் மனம் கொண்ட நளந்தனே என்றாலும் அவனை மணம் கொள்ள மிதுனாவின் தன்மானம் மறுத்தது. ஆனால் இரண்டு தலைமுறை பிந்திய தாத்தாவிற்கு அவளின் நுண்ணிய உணர்வுகள் புரியுமா? இருக்க இடம் கொடுத்து, தன் தாத்தாவிற்கு தைரியம் கொடுத்த பெரியவரை நன்றி மறந்து மறுப்பு சொல்லி வார்த்தைகளால் நோகடிக்க முடியவில்லையே அவளால்..

நளந்தன் அவளை ஒரு ஆழ பார்வை பார்த்தான். அவள் பேச, மறுக்க வாய்ப்பளிக்கிறானாம்! செயலற்று சொல்லற்று இன்னும் சொல்ல போனால்.. உயிரற்று நின்றாள் மிதுனா!

மறுபேச்சின்றி நளந்தன் தன் கழுத்தில் மின்னிய தங்க சங்கிலியை கழற்றி ஒரு கணநேர  தயக்கத்திற்கு பின் வேரோடி நின்றிருந்த மிதுனாவின் சங்கு கழுத்தில் அணிவித்தான்.

Comments

  1. மிதுனாவின் மனம் படும் பாட்டை உணர முடிகிறது ;

    மனது வலித்து துக்கம் பொங்கி கண்களில் வரும் கண்ணீரை அடக்கி கொள்கிறேன்

    இப்படி எல்லாம் திருப்பம் இருக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்தே பார்க்கவில்லை

    மிதுனாவை புரிந்து கொண்டு நளன் சங்கிலி அணிவித்து இருந்தா நன்றாக தான் இருந்து இருக்கும் ஹும் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

    ReplyDelete
  2. Excellent story.......Keep on writing

    ReplyDelete
  3. AnonymousJune 29, 2017

    Why always hero's blow hits the heroine but heroine's blow is well defended by the hero. I dislike this type of proceedings. If he can also her perfectly why not she ? Somewhat it justifies male supremacy. My humble request - please do change such scenes in your subsequent stories. Let us feel strong!

    ReplyDelete
    Replies
    1. Sure-nga. Next time heroine hits and hero budges okva ;) Kidding. I get your point. Point well taken. - Author

      Delete

Post a Comment