Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 56

இருள் மறைத்த நிழல் (தேனு) - 56

மதிய உணவிற்கு நளந்தனுக்கு பிடித்த கத்திரிக்காய் பச்சை  அவரை  குழம்பும், பருப்பு உசிலியும் தயார் செய்த மிதுனா மாலை சிற்றுண்டிக்கும் அவனுக்கு பிடித்த குழி பணியாரமும், நிலக்கடலை சட்டினியும் செய்வதாக  இருந்தாள்.  நளந்தன்  வரும்  வரை  சோம்பியிருக்க  பிடிக்காமல்  பணியார  மாவை  கலந்து கொண்டிருந்தவள் அவன் வந்த வேகம் பார்த்து திடுக்கிட்டு தான் போனாள். அவள் பெட்டியோடு விடுதிக்கு கிளம்பிய அன்றிலிருந்து மதியம் ஒரு தரம் வீட்டிற்கு வருவதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தான் நளந்தன். காரணம் மட்டும் ஏதேதோ சொல்வான். அவளும் கண்டும் காணாது இருந்துவிடுவாள். எப்படியோ மதியம் வந்தான் என்றால் வாய்க்கு ருசியாக சாபிடவாவது செய்வானே. அந்த நேரத்தில் மட்டும் தன் வாய் துடுக்கிற்கு கடிவாளமிட்டு கொள்வாள். அதனாலோ என்னவோ அவனும் ஒரு விருப்பத்துடனே மதியம் வீடு வருவது போல இருக்கும்.

ஆனால் இன்றைக்கு ஏதோ அமைதி இழந்தது போல இருந்தான். மடமடவென்று சமையல் அறைக்குள் நுழைந்தவன், சட்டென்று ஸ்டவ்வை அணைத்து விட்டு அவள் கையில் படிந்திருந்த மாவையும் பொருட்படுத்தாது அவள் கை பற்றி தர தர வென்று அவன் அறைக்கு இழுத்து சென்றான். அங்கே அவளை சுவரோடு நிறுத்தி, "அன்று எதற்காக பெங்களூரு செல்ல வேண்டும் என்று கேட்டாய்?" என்றான் மூச்சு வாங்க.

என்னவோ ஏதோ என்று தானும் பதறி ஒரு வார்த்தை கேளாது அவன் இழுத்த இழுப்புக்கு ஈடு கொடுத்து சுவரோடு அவன் அழுத்தியபடி அழுந்தி கிடந்த மிதுனாவுக்கு 'இதற்கு தானா இத்தனை ஆர்ப்பாட்டமும்' என்று கோபம் வந்தது.

அதோடு அன்று அவன் "வேறு தேடியாகிவிட்டதா?" என்று கேட்டதும் நினைவு வர, கொஞ்ச நாள் காட்டாதிருந்த குத்தல் பேச்சு எல்லாம் குற்றால அருவியாய் பொங்கி வந்தது.

"நீங்கள் தான் எல்லாம் தெரிந்தவர் ஆயிற்றே, வேறு தேட என்று சொல்லியும் தெரியவேண்டுமா?" என்றாள் குரோதமாக.

"சட்! மிதுனா! நேரிடையாக பதில் சொல்.  அன்று உன் தாத்தாவின் உடல் நிலை பற்றி சுகம் நர்ஸ் சொன்னது கேட்டு தானே பெங்களூரு செல்ல துடித்தாய்? நான் வருவதற்கு முன்பே அவள் உன்னை கூப்பிட்டிருக்க வேண்டும். அதற்காக தான் என் அறையில் அழுது கொண்டு நின்றிருந்தாயா? இப்படி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்றான் ஆற்றாமையுடன்.

ஆள் தேடும் பரத்தை என்பது போல அவன் பேசிய பேச்சில் மனம் வெறுத்து அவள் வாய் மூடி நின்றது அவளுக்கும் நினைவிருந்ததே. காரணம் வேண்டுமாம்! வெகுண்ட சினத்தில் உதடுகள் அழுந்த அவனை உறுத்து நோக்கினாள் மிதுனா.

"நான் உன்னை தவறாக நினைத்தேன் என்று தெரிந்தும் ஏதும் சொல்லாது ஏன் போனாய்?" என்று மீண்டும் அரற்றினான் நளந்தன். சொல்லியிருந்தால் ஏதோ பெரும் துன்பம் தவிர்த்திருப்பான் போல.

"ஏன் சொல்ல வேண்டும்?" என்று எதிர் கேள்வி கேட்டாள் மிதுனா.
"தீர்ப்பை எழுதி வைத்து கொண்டு வழக்கை விசாரிப்பவரிடம் எதற்காக சொல்ல வேண்டும்?" என்றாள் தீராத கோபத்தோடு.

ஒரு கணம் கண்களை இறுக மூடி திறந்தான் நளந்தன். அவன் முகம் வெகுவாக கலங்கி இருந்தது. அவனே இழுத்து விட்டு கொண்டது தானே படட்டும் என்று அந்த கோபத்தில் ஒரு ஷணம் நினைத்தாலும், பாழாய் போன மனது கேட்கவில்லை.

நடந்து முடிந்த கதை இதற்கு ஏன் இத்தனை பாடுபடுகிறான்? யோசியாது விட்டெறிந்த வார்த்தைகளில் உடைந்த கண்ணாடி போல உள்ளங்கள் உடைந்தும் போயின தான். ஒட்ட வைக்க முடியாத படி. அதற்கு மேலும்  கண்ணாடி துகள்களை பொறுக்கி இன்னும் புண்ணாக்கி கொள்ள வேண்டுமா? மனம் பொறுக்காமல்,
"செத்த குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது போல இது எதற்கு வேண்டாத விசாரணை?" என்றாள் மெதுவாக.

"அப்படி சொல்லாதே. அந்த வார்த்தை சொல்லாதே" என்று பதறினான் நளந்தன்.

"அன்று நீ எப்படிப்பட்ட வேதனையில் இருந்திருப்பாய்.. ஏற்கெனவே உன் தாத்தா பற்றிய உண்மை தெரிந்த அதிர்ச்சியில் இருந்திருப்பாய்.. அதில்  நான் வேறு கண்டதையும் பேசி, காலம் கடத்தி.. உன் தாத்தாவிடம் நல்லவிதமாக நாலு வார்த்தை கூட பேச முடியாது போய்.. இவனால்  தானே என்று என் மேல் வெறுப்பாக கூட இருக்கும். அதற்கு எல்லா உரிமையும் தகுதியும் உனக்கு இருக்கிறது. I can understand.. நான் அன்றைக்கு பேசியது பெரும் தவறு..மிதுனா.. " என்று அவள் கை பற்றி, "நடந்தவற்றை மறந்து விடு. உன் விருப்பப்படி  உன் வாழ்வை அமைத்து கொள். அதற்கு வேண்டியதை நான் செய்கிறேன், ஒரு பிராயசித்தம் போல "  என்றான்.

அவள் மலைத்து அவனை பார்த்து கொண்டிருக்கையிலேயே,
"இப்படி என்று நீ சொல்லியிருந்தால் அல்லது சுகனுக்காவது  இத்தனை நாள் கடத்தாமல் முன்பே என்னிடம் சொல்ல தோன்றியிருந்தால், இந்த துன்பம் எதுவும் நம்மை அண்ட விட்டிருக்க மாட்டேன்." என்று ஒரு பெருமூச்சு விட்டு பிரிந்தான்.

பிரமித்து நின்றாள் மிதுனா. எதற்கு வந்தான், என்ன சொன்னான் என்று முழுமையாக விளங்கவில்லை அவளுக்கு.

எண்ணி பார்க்கையில், அன்று கூட 'தாத்தாவிற்கு தோன்றி' என்று ஏதோ சுந்தரம்  தாத்தாவாக தான் அவளை பெங்களூரு அழைத்து செல்ல சொன்னது போல நளந்தன் கூறினானே. அப்போதே அவளுக்கு உறுத்தியதே. நானாக கேட்காவிட்டால், தன் தாத்தா விஷயம் இன்னமும் மறைத்து தானே இருப்பார்கள் என்று கூட ஆத்திரப்பட்டாளே.. இன்று வரை நர்ஸ் மூலம் விஷயம் வெளியான விவரம் பாவம் இவனுக்கு தெரிய வரவில்லை போலும். அந்த டாக்டர் சுகன் இன்று பேச்சு வாக்கில் சொல்லி தெரிந்ததும் குற்ற உணர்வு உந்த ஓடி வந்தான் போலும்..

எனினும், தாத்தாவின் உடல் நிலை பற்றிய விஷயம் ஒரு நர்ஸ் மூலமாக அவளுக்கு அவன் வரும் முன்பு தெரிந்தது என்பது எந்த வகையில் அவள் மேல் சுமத்தப்பட்ட பழியை துடைத்தது என்று தான் அவளுக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று, நளந்தன் முன்பு உள்ளுணர்வை வைத்து மட்டும் அவளை குற்றமற்றவள் என்று சொன்னது போக இப்போது அவனுக்கு ஒரு வலுவான ஆதாரமும் கிடைத்திருப்பது புரிந்தது.

நளந்தன் அவள் கை பற்றி மனமுருகி பேசியது வேறு நெஞ்சை பிசைந்தது.

Comments

  1. AnonymousJune 02, 2012

    Luvly situation akka

    ReplyDelete
  2. என்று பதறினான் நளந்தன்.

    "அன்று நீ எப்படிப்பட்ட வேதனையில் இருந்திருப்பாய்.. ஏற்கெனவே உன் தாத்தா பற்றிய உண்மை தெரிந்த அதிர்ச்சியில் இருந்திருப்பாய்.. அதில் நான் வேறு கண்டதையும் பேசி, காலம் கடத்தி.. உன் தாத்தாவிடம் நல்லவிதமாக நாலு வார்த்தை கூட பேச முடியாது போய்.. இவனால் தானே என்று என் மேல் வெறுப்பாக கூட இருக்கும். அதற்கு எல்லா உரிமையும் தகுதியும் உனக்கு இருக்கிறது. I can understand.. நான் அன்றைக்கு பேசியது பெரும் தவறு..மிதுனா.. " என்று அவள் கை பற்றி, "நடந்தவற்றை மறந்து விடு. உன் விருப்பப்படி உன் வாழ்வை அமைத்து கொள். அதற்கு வேண்டியதை நான் செய்கிறேன், ஒரு பிராயசித்தம் போல " என்றான்.

    A true lovable person's original character i also hurting like this............this comment is not for certifying me but this is true...........

    ReplyDelete

Post a Comment