Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 27

  இருள் மறைத்த நிழல் (தேனு) - 27

அடுத்த நாள் நளந்தன் அதிகாலையிலேயே அலுவலகம் சென்றுவிட்டான். அதனால் அவன் பார்வையில் படாமல் ஓடவேண்டிய கஷ்டம் மிதுனாவுக்கு இல்லை. அந்த கஷ்டம் மட்டும் தான் இல்லை! மற்றபடி சுபலாவின் பேச்சு மனதை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. நல்லவேளை, சுகுனாம்மா அடுத்த நாள் வருவதாக இருந்ததால், அவர்கள் தங்க அறை ஒதுக்குவது, சமையல்காரருக்கு, அடுத்த நாள் விருந்துக்கு மெனு சொல்வது, தாத்தாவிற்கு பணிவிடை என்று ஒன்றன்பின் ஒன்றாக அன்று நாள் முழுக்க வேலை வர மேலும் அல்லாட மனதிற்கு நேரமின்றிப் போனது.

தாத்தா சொன்னது போலவே, சுகுனாம்மா லட்சுமி கடாட்சம் போல அம்சமாக இருந்தார்கள். சிரித்த முகம். நல்ல குணம். வேற்று ஆள் போல அவர்களும் நடந்துகொள்ளவில்லை, அவளையும் நடத்தவில்லை. சுகிர்தனும் சகஜமாகவேப் பழகினான். அதிலும் நளந்தனிடம் ரொம்பவே நெருக்கம் போலும். இருவரும் சகோதரர்கள் போல ஒட்டித் திரிந்தனர். பார்க்க கூட சம வயதும், ஒத்த உடல் வாகுமாகத் தான் இருந்தனர்.

என்ன ஒரு வித்தியாசம் என்றால், நளந்தனிடம் எப்போதும் பேச்சில் ஒரு நிதானம், செயலில் ஒரு மெச்சூரிட்டி இருக்கும். எண்ணி எண்ணி பேசுவான்.. வெகு சில சமயம் சிரிக்க சிரிக்க பேசுவான்.

சுகிர்தனோ எப்போதும் ஒரே அரட்டை தான். கலகலவென்று அவன் பேசினாலும், சுபலா போல அல்லாது அடுத்தவர் பேசவும் இடம் கொடுத்தது மிதுனாவுக்கு பிடித்தது. தாய்கேற்ற பிள்ளை!  அடுத்தவர் மனதையும்  புண்படுத்தாது அவன் பேசுவது நிச்சயம் சுகுனாம்மாவின் குணம் தான்.

சுகுனாம்மாவை எப்படி அழைப்பது என்று அவள் திணறிய போது பெருந்தன்மையாக, எடுத்த எடுப்பிலேயே, "விஜயன் போலவே நீயும் என்னை அத்தை என்றே சொல்லம்மா" என்று அவள் மனம் குளிர  கூறினார்களே! நளந்தனிடத்தில் அவர்களுக்கு எவ்வளவு அன்பு என்று தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறாள். அவனைப் போலவே கூப்பிடு என்றால், உன்னிடத்திலும் அது போன்றே வேற்றுமையின்றி அன்பு பாராட்டுவேன் என்று தானே   பொருள்.

அவர்கள் அப்படி கூப்பிட சொன்னது மனதுக்கு நிறைவாக இருந்தாலும், என்னவோ சட்டென்று 'அத்தை' என இயல்பாக கூப்பிட முடியவில்லை. அம்மா, அத்தை என்று அவ்வப்போது குழப்பியடித்துக் கொண்டுதானிருந்தாள். அவர்களும் ஒரு சிரிப்போடு அதை கண்டும் காணாது இருந்துவிடுவார்கள்.

சுகிர்தன் வந்ததில் இருந்து நளந்தனுக்கு அவனோடு Lab-ற்கு இடம் பார்க்க, நிலத் தரகரைப் பார்க்க என்று ஊர் சுற்றவே நேரம் சரியாக இருந்தது. அது மிதுனாவுக்கும் சௌகர்யமாகப் போனது. அவன் முகத்தைப் பார்க்க வேண்டியதில்லையே.

அப்படியும் சிலசமயம் எல்லாரும் சேர்ந்து உணவருந்தும் போது அவனோடு உரையாட, குறைந்த பட்சம் அவன் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயம், சங்கடம் ஏற்பட்டது.

முதல் இருநாட்களும் மிதுனா நளந்தன், சுகுணா மற்றும் சுகிர்தனோடு சேர்ந்து உண்ண வாய்ப்பு அமையவில்லை. அமையவில்லை என்ன..அமைய அவள் விடவில்லை. முதல் நாள் சுகுனம்மாவை வரவேற்கிறேன், விருந்து பரிமாறுகிறேன் பேர்வழி என்று அங்குமிங்கும் ஓடியாடி கவனித்தாள். அடுத்த நாள் சுகுனம்மாவின் பிறந்த நாள். ஒரு சர்ப்பரைஸ் விருந்து வைக்க நளந்தன் விருப்பப்பட்டான். அதையும் தலைமேல் கொண்டு செய்து முடித்தாள். அன்றும் வெட்டிய கேக்கை எல்லாருக்கும் தட்டில் எடுத்து வைக்க , விருந்து பரிமாற என்று கூட சேர்ந்து சாப்பிடாமல் பம்பரமாக சுற்றினாள். எல்லாம் நளந்தனை முகத்துக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கும் முயறசி  தான்.  ஆனால் மறுதினமும் பரிமாற இவள் முனைகையில், சுகுனம்மா அதெல்லாம் முடியாது என்று முடிவாக சொல்லிவிட்டார்.
"இன்று தாத்தா, நீ, நான், பசங்கள் எல்லாரும் ஒன்றாகத் தான் சாப்பிடப்போகிறோம்"

மிதுனா, "அட்லீஸ்ட், ரசம், குழம்பு எல்லாவற்றையும் சின்ன சின்ன பாத்திரத்தில் ஊற்றி டேபிளில் வைத்துவிடுகிறேனே, அம்மா " என்று கெஞ்சவும் அதற்கு மட்டும் விட்டுக்கொடுத்தார்.

செவ்வக வடிவில் உணவு மேஜை. மேஜையின் நீள பக்கங்களில் தலா இரு நாற்காலிகளும், மற்ற இரு பக்கங்களில் தலா ஒரு நாற்காலியுமாக மொத்தம் ஆறு பேர் உட்காரும் அளவில் இருந்தது அந்த மேஜை.

ஒற்றை நாற்காலி இருந்த இரு முனைகளில் தாத்தாவும், சுகுனம்மாவும் எதிர் எதிராக அமர்ந்துகொண்டனர். அதே போல எதிர் எதிராக நளந்தனும் சுகிர்தனும் நீள் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள். நளந்தனுக்கு அடுத்த இருக்கையும், அதே போல சுகிர்தனுக்கு அடுத்த இருக்கையும் காலியாக இருந்தன. இதில் தான் எங்கே அமர்வது என்று  யோசித்தபடி ரசம் பாத்திரத்தை உள்ளிருந்து எடுத்து வர நகர்ந்தாள் மிதுனா.

அவள் வரும் வரை மற்ற அனைவரும் காத்திருக்க, சுகிர்தன் மட்டும் எப்போதும் போல விளையாட்டாக, "என்னால் பொறுக்க முடியாதும்மா.. சாம்பார் இப்படி மணக்கிறதே!"  என்றபடி ஒரு பாத்திரத்தை தன் பால் இழுத்தான்.

அவன் கையை பட்டென்று தட்டிவிட்ட சுகுனம்மா, "ஆமாம்டா..இதற்கெல்லாம் பற" என்று செல்லமாக அதட்டினார்.

நளந்தனும் சிரித்தபடி, "பசி கிள்ளுகிறதே அத்தை. சீக்கிரம் வயிற்றை நிரப்பலாமே என்று பார்த்தால்.." என்றான்.

சுகுணா அவனையும் செல்லமாக கடிந்து கொண்டார். "அவள் வருவதற்குள் என்னடா அவசரம்? வயிற்றை நிரப்புவதில் காட்டும் வேகத்தை இதோ இந்த இரு நாற்காலிகளையும் நிரப்புவதில் காட்டியிருக்கலாம்." என்று காலி இருக்கைகளைக் காட்டினார்.

"நாற்காலியை நிரப்புவதிலா?" என்று இரு இளைஞர்களும் ஒரு குரலில் கேட்டனர்.

"தடி மாடுகளா! இதுகூட புரியவில்லையா?! காலாகாலத்தில் இருவரும் ஆளுக்கொருத்தியைப் பிடித்து வந்திருந்தால் இன்று இந்த ரெண்டு நாற்காலிகளும் காலியாகவா இருந்திருக்கும்?!"

ரசம் பாத்திரத்தோடு மேஜைக்கு வந்துவிட்டிருந்த மிதுனாவுக்கு இப்போது முன்னிலும் அதிக சங்கடமாக இருந்தது. வருங்கால மருமகள்களின் இடம் என்று குறிப்பு காட்டி அவர் பேசிய பேச்சிற்கு பிறகு அதில் எந்த நாற்காலியில் அமரவும் ஒரு மாதிரி இருந்தது.

ஆனால் சுகுணா விகல்பமின்றி, "வாம்மா..வந்து நீயும் உட்கார். நீயாவது என் சொல்பேச்கு கேட்டு நட" என்றார்.

எங்கு அமர்வது? இத்தனை பேச்சிற்கு பின் நளந்தன் அருகே எப்படி.. சும்மாவே அவன் அருகாமை தகிக்கிறது. இயல்பாக இருக்க முயன்றும் முடிவதில்லை.. இதில் இப்படியொரு தருணம்.

ரசக் கிண்ணத்தை வைக்க இடம் தேடியது போல பாவனை செய்து,
நளந்தனை சுற்றிக் கொண்டு வந்து சுகிர்தன் அருகே இருந்த மேசைப் பகுதியில் கிண்ணத்தை வைத்து விட்டு அப்படியே அவனுக்கருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

அப்பாடி என்று அவள் மூச்சு விடக் கூட அவகாசம் கொடுக்காது சுகிர்தன் புண்ணியம் கட்டிக் கொண்டான். சத்தமாக சிரித்து, சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டு, "அம்மா, என் வேலை முடிந்துவிட்டது. டேய், விஜய்! உன் பக்கத்து சீட் தான் காலி. சீக்கிரம் உன் ஆளைத் தேடு" என்றான்.

"உனக்கு வாய் ரொம்ப நீளமடா, சுகிர்தா" என்று அந்த கேலிப் பேச்சை வெகு இயல்பாக ஏற்று சிரித்தார் சுகுனம்மா. திடுக்கிட்டாள்  மிதுனா.  கூட சேர்ந்து தாத்தாவும் சிரிக்க வெறும் கேலி தானே என்று மனதை லேசாக்கிக் கொண்டு அவளும் உடன் சேர்ந்து முறுவலித்து நேர் எதிரே இருந்த நளந்தனை ஏறிட்டால்... அவன் முகத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லை!

எல்லோரோடும் சேர்ந்து கண்ணை எட்டாத ஒரு சிரிப்பு சிரித்தான். அவன் சிரிக்கையில் எப்போதும் என்னோடு சேர்ந்து சிரியேன் என்று கட்டி இழுக்கும் அவன் கண்கள் அந்த கணம் பனிக்கட்டி போல உறைந்து கிடந்தன. இந்த கேலிப் பேச்சை அவன் ஏனோ ரசிக்கவில்லை என்பதை மிதுனா மெலிதான அதிர்ச்சியோடு கவனித்தாள்.

நேற்று சுபலாவோடு அப்படி கொஞ்சினானே..சரி..அவனாக கொஞ்சவில்லைதான்.. ஆனால் அவள் அப்படி கொஞ்ச இடம் கொடுத்தானே..இன்று இவள் இன்னொருவன் அருகில் அமர்ந்ததற்கே இப்படி மூஞ்சைத் தூக்கிக் கொள்கிறானே! ஏன்?

அவனைத் தாண்டி சென்று சுகிர்தன் அருகே அவள் அமர்ந்ததை அவன் அவமானமாக உணர்ந்திருப்பானோ? தன்னை விடுத்து வேறு எந்த ஆணையும் மேல் என்று எந்த பெண்ணும் நினைத்துவிடக் கூடாது போலும் அவனுக்கு. அப்படித்தான் இருக்க வேண்டும். அவளது அந்த மகத்தான கண்டுபிடிப்பும் மனதிற்கு கசந்தது.

Comments

  1. Good going!midhuna might have sat with nalan.

    ReplyDelete

Post a Comment