Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 22


எதிர்பாராதவிதமாக ஆந்திராவில் ஓரிரு நாட்கள் அதிகம் தங்க நேர்ந்தாலும், முடிந்தவரை சீக்கிரமாகவே ஊர் திரும்பினான் நளந்தன். ஈரக் கூந்தலுடன் பூஜைக்கு செவ்வரளிப்பூக்களைச் செடிக்கு வலிக்காமல் மெல்லப் பறித்துக் கொண்டிருந்த மிதுனா, அவனுக்கென்றே தைத்தார் போன்று இருந்த வெள்ளை பனியனும், அரைக்கால் சட்டையுமாக 'ஜாகிங்' முடித்து அவளை நோக்கி வந்த நளந்தனைப் பார்த்ததும் அகமும் முகமும் ஒரு சேர மலர்ந்தாள். தேடி அலைந்த ஒன்று கைவரப் பெற்ற நிம்மதி நெஞ்சுக்குள். பதிலுக்கு மோகனமாய் புன்னகைத்தான் நளந்தன்.

ஏதோ டியூடரிங்  செய்கையில் நிம்மதி பெற்று மனம் ஒருமுகப்பட்டதாக நினைத்தாளே.. அவனைக் கண்டதும், அவன் முறுவலை ஏற்றதும்,  ஏற்பட்ட உணர்வு.. அதுதான் அமைதி, நிம்மதி எல்லாம் என்றது! என்ன விசை வைத்திருக்கிறான் அந்த புன்னகையில்?!

வெகு அக்கறையாக நல விசாரணை செய்தான். அவனாவது தாத்தாவின் பயண விவரம் தருவானோ என்று நப்பாசைத் தோன்றியது. கூடவே நேற்றிரவு தான் ஊரில் இருந்து திரும்பி இருப்பான். அதற்குள் இவள் தாத்தாவின் பயண விவரம் பற்றி அவனுக்கு என்ன, எப்படி தெரிய வாய்ப்பு? வந்ததும் வராததுமாக இன்று ஜாகிங் சென்றதே அவளுக்கு ஆச்சர்யம்தான். பயண அலுப்பு என்று எதுவும் கிடையாதா இவனுக்கு?!

அவளோடு சேர்ந்து ஒன்றிரண்டு மலர்களைப் பறித்து அவளுக்கு ஒத்தாசை செய்தவன், அவள் புறம் திரும்பி, "வேறு ஒன்றும் தெரிய வேண்டாமா?" என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

தெரிய வேண்டும் தான்..அவள் தாத்தாவைப் பற்றி..அவர் இப்போது எங்கிருக்கிறார்..எப்படி இருக்கிறார்..என்ற விவரமெல்லாம். கேட்கலாமா? ஏதோ தெரியும் போல இருக்கிறதே இவன் பேச்சில்..அவள் கேட்க முடிவெடுத்து வாய் திறக்கையில்,
"உன் தாத்தாவிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. என் பெயருக்கு வந்துள்ளதால் முத்து என் பார்வைக்காக எடுத்து வைத்திருக்கிறான். கடிதம் என் அறையில் உள்ளது, மேஜை மேல். நீயே போய் எடுத்துக் கொள்கிறாயா? நான் கொஞ்சம் 'வார்ம் அப்' செய்து  விட்டு வருகிறேன்" என்றான்.

தாத்தாவின் கடிதம் வந்தது ஒரு மகிழ்ச்சி என்றால், அவள் தவிப்பு உணர்ந்து அதை அவளிடம் அவன் உரைத்த விதம் ஒரு மகிழ்ச்சி. அவனிடம் தலை அசைத்து விடைபெற்று ஒரு துள்ளலுடன் உள்ளே சென்றாள் மிதுனா.

எப்போது வந்த கடிதமோ..தாத்தாஅவள் பெயருக்கு எழுதியிருந்தால் வந்த அன்றே அவள் கைக்கும் கிடைத்திருக்கும்..மனம் பொரும மாடிப் படி ஏற எத்தனிக்கையில், சுந்தரம் இருமுவது கேட்டது. தொடர் இருமல்..

அவர் அறைக்குச் சென்று தலையணையை சரியாக வைத்து வெந்நீர் தந்து அவரை ஆசுவாசப்படுத்தினாள் மிதுனா.

ரொம்பவும் களைத்துக் காணப்பட்டார் பெரியவர்.

ஆறிப் போன காபி டம்ளரைப் பார்த்த மிதுனா, "நீங்கள் இன்னும் காபி கூட குடிக்கவில்லையே தாத்தா" என்றாள்.

"இந்த இருமலுக்கு சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே" என்றவள், "நான் கொஞ்சம் சுக்கு காபி எடுத்து வருகிறேன், தாத்தா" என்று சமையலறைக்கு சென்றாள்.

சமையல்காரர் கைவேலையாக இருக்க, தானே காபி தயாரித்து பெரியவருக்கு கொடுத்தாள்.  அவர் கண்கள் நன்றிப் பெருக்கில் நனைந்தன. "நீ போய் சாப்பிடம்மா. விஜயனும் வந்துவிட்டான், இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்கள்" என்று அவர் சொன்ன போது தான் நளந்தன் அவன் அறையில் கடிதம் இருக்கிறது எடுத்துக் கொள் என்று சொன்னானே என்று ஞாபகம் வந்தது.

தாத்தாவின் கடிதத்தைப் படிக்க ஆவல் உந்தித் தள்ள, பெயருக்கு அவரிடம் "சரி தாத்தா" என்று சொன்னவள், ஓடாத குறையாக நளந்தனின் அறைக்குச் சென்றாள். மிக நேர்த்தியாக இருந்தது அந்த அறை. கிட்டத்தட்ட அவளது அறை போன்ற அமைப்பு தான். ஆனால் அளவில் இன்னும் பெரியது. அதற்கேற்ற அளவில் கட்டில், மேஜை, நாற்காலி எல்லாம். இரண்டு மேஜை இருக்க, இரண்டிலும் பல கடிதங்கள் இருக்க, எது அவளுடையது? பேசாமல் நளந்தனையே எடுத்துத் தர சொல்லிக் கேட்கலாமா? கடிதங்கள் ஏதோ வகை படுத்தப்பட்டது போல கட்டு கட்டாக இருக்க, அவள் எதையாவது கலைத்து..மிதுனா  தன் பாட்டில் யோசித்துக்கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து  அறையினுள் ஒலித்த விசில் சத்தத்தில் துள்ளி விழுந்தாள்!

நிமிர்ந்து பார்த்தால், நளந்தன்! உள்ளிருந்த 'அட்டாச்டு பாத்ரூம்'-ல் இருந்து கையில்லாத பனியனும் ஷார்ட்ஸ் - மாக முகத்தில் ஷேவிங் க்ரீமோடு எட்டிப் பார்த்தான். வெற்றுத் தோளில் கிடந்த வெண்ணிற டர்கி டவல் அவன் குளிக்க ஆயத்தமாகிறான் என்று சொல்லியது. முகம் சிவக்க தலை குனிந்த மிதுனா வாய்க்குள், "சாரி" என்று முனுமுனுத்தாள்.

இவன் எப்படி இங்கே?..தாத்தாவிற்கு சுக்கு காபி வைத்த அந்த நேரம்.. அவனும் வார்ம் அப் முடித்து தன் அறைக்கு வந்திருக்கக் கூடும் என்று யோசிக்காது வந்துவிட்டாளே!

அவள் தடுமாற்றம் கண்டு மெல்ல சிரித்து,  தோளில் கிடந்த டவலால் ஷேவிங் க்ரீமைத் துடைத்தபடி வெளியே வந்தான். வந்தவன் விசிலடித்தபடி அவள் அருகில் வர மூச்சடைத்தது அவளுக்கு. அருகில் வந்தவன், அவள் கைக்கு மிக அருகாமையில் கிடந்த ஒரு மடித்த காகிதத்தை எடுத்து, "ஒரு பெரிய கடித உறையில், எனக்கு, தாத்தாவிற்கு, உனக்கு என தனித்தனி கடிதங்கள் வைத்து அனுப்பியிருந்தார் சந்தானம் சார். இது உனக்கு எழுதிய கடிதம்." என்று சாவதானமாக நீட்டினான்.

அந்த கோலத்தில் அவனை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்ட மிதுனா கையை மட்டும் தோராயமாக நீட்டி கடிதத்தை அவனிடமிருந்து பறிக்காத குறையாக பிடுங்கிக் கொண்டு கண் மறைந்தாள். "மெல்ல, மெல்ல" என்ற அவன் கேலிக் குரல் தேய்ந்து ஒலித்தது.

அவனது 'After Shave Lotion' மணம் தன்னைத் தொடர்வது போல ஒரு பிரமை! நெஞ்சில் தோன்றிய படபடப்பு தன் அறைக்கு வந்ததும், கையில் கிடந்த தன் தாத்தாவின் மடலைப் பார்த்ததும் பெரிதும் அடங்கியது. ஆவலும் ஏக்கமுமாக கடிதத்தைப் பிரித்தவள் கொஞ்சம் சோர்ந்து போனாள். அது அவள் தாத்தாவின் கையெழுத்து இல்லையே!

கடிதமும் சுருக்கமாக இருந்தது. அன்பு மிதுனாவுக்கு தாத்தா வரைவது என்று ஆரம்பித்து, பயணம் வெகு சௌகர்யமாக இருப்பதாகவும், வழியில் பார்த்த இடங்கள், மனிதர்கள் என ஒரு சின்ன பயணக் கட்டுரை போல! இறுதியில் அவளைப் பற்றிய நலவிசாரிப்புகளும், தைரியமூட்டும் வாசகங்களும்..எதுவும் அவள் மனதை எட்டவில்லை. கடிதம் அவர் கைப்பட எழுதப்படாதது ஒன்றே மனதை உறுத்தியது. எதற்கும் திருப்திபடாத தன் மனதின் மேல் வெறுப்பு கூடத் தோன்றியது.

அவர் ஊருக்கு செல்லவில்லை என்றாலும் குறை. சென்றாலும் குறை. கடிதம் வராவிட்டாலும் குறை. வந்தாலும் குறை.. கவலைப்பட ஒன்றும் இல்லையே என்று கவலைப்படுவது போல... எரிச்சல் மேலிட அறையினுள் அடைந்துகிடந்தாள்  மிதுனா.

மதிய உணவிற்காக அவளை அழைக்க வந்த நளந்தன் அவள் முகவாட்டத்தை ஒருபார்வையில் கவனித்துக் காரணம் கேட்க, அதற்குமேல் நெஞ்சுக்குள் வைத்து பொரும முடியாது மனதை உறுத்திய சந்தேகத்தை அவனிடம் கொட்டினாள் அவள்.

அதற்கும் பதில் வைத்திருந்தான் அவன். அவர் சொல்ல சொல்ல யாராவது எழுதியிருப்பார்களாம். அவன் அசாதாரணமாக சொன்ன விதம் அப்படியும் இருக்குமோ..என்று தோன்றியது. சிலசமயம் அவருக்கு தலைவலி காய்ச்சல் என்று உடல்படுத்தும் போது, அவளே கூட அவர் சொல்ல சொல்ல எழுதிக் கொடுத்திருக்கிறாள் தான்..இது ஏன் அவளுக்கு தோன்றவில்லை. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல..வீணாகக் கலவரப்பட்டு..
இல்லையே..வீண் கலவரம் என்றும் சொல்ல முடியாதே..எழுதக் கூட முடியாதபடி அவர் உடம்புக்கு ஏதாவது? மனம் முருங்கை மரம் ஏற, விக்கிரமாதித்யனானான் நளந்தன். வயதானதால் அவர் எழுத சோம்பல்பட்டிருப்பாராம். "வெறும் சோம்பல் கூட காரணமாக் இருக்கலாமே. எங்கள் டூர் பாக்கேஜில் மருத்துவ கவனிப்பும் உண்டு, அப்படி ஏதும் என்றால் அவர்கள் தகவல் தருவார்கள்" என்று நம்பும்படி கூறி அவளை அமைதிப்படுத்தினான்.

அவன் அருகாமையில் அமைதிகொண்ட மனது அவன் அகன்றால் தன் வேலையைக் காட்டியது. இந்த கலக்கம் எல்லாம் இன்னும் ஒரு இரண்டு மாதங்கள் தான் தாத்தா வந்தவுடன் அவரை இந்த பக்கம் அந்த பக்கம் நகர விடாது கூடவே வைத்துக் கொள்ளவேண்டும் என்று மனதிற்கு தெம்பூட்ட முனைந்தால் அது வேறு வகை துன்பத்தை விருந்துக்கழைத்தது.

இரு மாதங்களுக்கு பின் அவள் இந்த வீட்டை விட்டு பிரியவேண்டுமே! தாத்தாவைப் பிரிந்து இருப்பதை நினைத்து, 'இன்னும் இரு மாதங்களா?!' என்று மருளும் அதே மனது, இந்த வீட்டைப்   பிரிவதை நினைத்தால்  'இன்னும் இரு மாதங்கள் தானா?!' என்று மருகியது! சரிதான், அதற்குள் இந்த வீட்டோடு அப்படி ஒன்றிவிட்டாளா?! விந்தையான வேதனைதான்!
மனப்போராட்டமும் வேலைப் பளுவும் அதிகரிக்க, முன்னை விட பெரும்பான்மை நேரம் அறைக்குள்ளேயே அடைந்து கொண்டாள் மிதுனா.

Comments

  1. ஹலோ தேனு ! உங்க மனசிலே என்ன நினைசுகிட்டு இருக்கீங்க

    கமெண்ட்ஸ் போடாம படிச்சுட்டு போகோனும்ன்னு நினசிகிட்டு இருக்கரவளை

    போக விடாம பிடித்து வைப்பதிலே அப்படி என்ன உங்களுக்கு ஒரு அலாதி இன்பம் !

    அப்புறம் மானே ,தேனே ,மயிலே ,குயிலே ,கண்ணே ,மணி யேன்னு ஏதாவது திட்டிட போறேன் !

    ReplyDelete

Post a Comment